
வரும் 2026-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொங்கு மண்டலப் பகுதிகளில் ஒன்றான திருப்பூர் மாவட்டம் பல்லடம், காரணம்பேட்டையில் திமுக சார்பில் டிசம்பர் 29,2025 அன்று மாலை 4 மணி அளவில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்‘ என்ற தலைப்பில் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அவர்கள் தலைமை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மேற்கு மண்டலத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பெண்களைத் திரட்டும் பொறுப்பினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஏற்றுக் கொண்டு வழிநடத்தினார்.

மாநாட்டிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள்:
இந்த மாநாட்டிற்காக 150 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ளவுள்ள பெண்கள் கருப்பு – சிவப்பு நிற ஆடை(சுடிதார்/புடவை) அணிந்து வருமாறு வலியுறுத்தப்பட்டது மட்டுமல்லாமல் கடந்த வாரமே செந்தில் பாலாஜி அவர்கள் மூலம் ஆடைகள் வழங்கவும் பட்டது. இந்த நிலையில் பெண்கள் அதன்படி அவ்வாடைகள் அணிந்து பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெறும் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பெண்களின் வசதிக்காக 350 மொபைல் டாய்லெட், குடிநீர் வசதி, மருத்துவ வசதி, மாநாட்டிற்கு வந்து செல்லும் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விரிவான போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது மட்டுமல்லாமல் பாதுகாப்பு வசதிக்காக 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வரின் உரை:
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றினார். பெண்கள் பாதுகாப்பான முறையில் தங்கி பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் இதுவரை 19 தோழி விடுதிகள் அமைக்கப் பெற்றிருக்கிறது, திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக இருக்கிறது என்றும் பெண்கள் முன்னேற்றமே ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் என்றும் திரு ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுகான நலத்திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்களை பட்டியலிட்டு இப்போது வரையில் பெண்களுக்கு திமுக என்ன செய்திருக்கிறது என்பது பற்றி பேசியுள்ளார். திமுக நடத்திய பல்வேறு வெற்றிகரமான மாநாட்டின் தொடர்ச்சியே இது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி தலைமையில் தேர்தல் தயாரிப்பு:
அடுத்ததாக இம்மாநாட்டில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உரையாற்றியுள்ளார். அவர் பேசும் போது “தமிழ்நாடு என்பது தந்தை பெரியார் உருவாக்கிய சமத்துவப் பூங்கா; இங்கு அமைதியும் மத நல்லிணக்கமும் சமத்துவமும் தான் என்றைக்குமே நிலைத்து நிற்கும். தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் எந்த செயலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று ஆணித்தரமாக குறிப்பிட்டார்.
கழகத்தின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி அவர்களின் தலைமையில் மக்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்பட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகம் முழுவதும் பயணித்து குறிப்பாக மகளிரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக முன்னெடுப்புகள் எடுக்கப்படவுள்ளோம் என்றும் வலியுறுத்திக் கூறினார்.
வேலைவாய்ப்பும் கல்வியும் – பெண்கள் முன்னேற்றத்தின் பாதை:
“47 சதவீதம் வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கும் மாநிலம் நமது தமிழகம் என்பதை மிகவும் பெருமையாக கூறுகிறேன். பிற மாநிலங்களில் அதற்கான வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதற்கான பல்வேறு முயற்சிகளும், கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும் எடுத்தது திமுக என்பது மறுக்க முடியாத உண்மை” என துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அவர்கள் கூறினார்.
மாநாட்டின் பிண்ணனி:
இந்த மாநாடு அரசியல் மேடையாக மட்டும் இல்லாது, பெண்களின் தன்னம்பிக்கை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு பெரும் அடையாளமாகவும் அமைக்கப் பெற்றது.
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பு, வெறும் கோஷமாக இல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகவே இந்த மாநாடு அமைந்தது. அரசியல் முடிவெடுப்புகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதையும், சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தளம் வரை பெண்களின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதையும் இந்த மாநாடு வலியுறுத்தியது.
மேலும், இம்மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் தயாரிப்பின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், திமுகவின் அடிப்படை கொள்கைகளான சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை மீண்டும் மக்கள் மத்தியில் உறுதியாகவும் தெளிவாகவும் நிலைநாட்டும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் பெருந்திரளாக பங்கேற்றது, வருங்கால அரசியல் மாற்றங்களில் பெண்கள் முன்னணியில் இருப்பார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாக அமைந்தது.
மொத்தத்தில், திருப்பூரில் நடைபெற்ற இந்த மகளிரணி மாநாடு, பெண்களை அரசியல் சக்தியாக மாற்றும் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. பெண்களின் முன்னேற்றமே தமிழ்நாட்டின் முன்னேற்றம் என்ற கோட்பாட்டை நடைமுறையில் நிரூபிக்கும் வகையில், இந்த மாநாடு அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பதியப்பட்டுள்ளது.